இந்தியாவிலும் விரைவில் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் போகும்.. சாட்டிலைட் தரும் ஷாக்!

பெரும் தண்ணீர் பஞ்சம் ஏற்படபோகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் டிவியிலும், சமூக வலைதளங்களிலும் எச்சரித்துவருவதை நம்மில் பலர் நம்பவில்லை. ஆனால் இந்தியாவிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படப்போகிறது என்பதற்கான புதிய ஆதாரமாக செயற்கைக்கோள் தரவுகள் வெளியாகியுள்ளன.
உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நீர்நிலைகள் வற்றிப்போவதை ஆராய்ச்சி செய்த செயற்கைக்கோள் இந்தியா உள்ளிட்ட சில நாடுகளுக்கு அபாய சங்கை ஊதியுள்ளது. இந்தியா மட்டுமின்றி, மொராக்கோ, ஈராக், ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகளில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளது.
தி கார்டியன் செய்தித்தாளில் வெளியான தகவலின் படி, உலகில் உள்ள 5 லட்சம் அணைகளின் நீர் அளவீடுகளை ஆய்வு செய்த செயற்கைக்கோள், பருவநிலை மாற்றத்தால், இந்தியாவில் 'டே ஜீரோ' எனச் சொல்லப்படும் முற்றிலும் வறட்சியை சந்திக்கும் தருணம் முன்பு கணிக்கப்பட்டதை விட முன்கூட்டியே வரும் என எச்சரிக்கிறது.
மழைபொழிவு குறைவு
இந்தியாவில் ஏற்கனவே நதிநீர் பங்கீடு விவகாரத்தில் மாநிலங்களுக்கு இடையில் மோதல் முற்றியுள்ள நிலையில், வருங்காலம் இன்னும் மோசமாக இருக்கும் என்கிறது இந்த ஆய்வின் முடிவுகள். குறைவான மழைப்பொழிவு காரணமாக மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் அணை இதுவரை இல்லாத அளவுக்கு குறைவான நீர்மட்டத்துடன் காட்சியளிப்பதாகவும், இதனால் 30 மில்லியன் மக்கள் தண்ணீருக்காக தவித்துவருவதாகவும் சொல்லப்பட்டுள்ளது.
தண்ணீர் பஞ்சம் தொடங்கிவிட்டது
பி.டி.ஐ ஏஜன்சி செய்தியின்படி, வறட்சி காரணமாக, தற்காலிகமாக பயிர் நடவேண்டாம் என விவசாயிகளை கேட்டுக்கொண்ட குஜராத் அரசு, பாசன சேவைகளை நிறுத்திவிட்டது. இப்படியாக பல மாநிலங்களில் வறட்சி தலைவிரித்து ஆடத்தொடங்கிவிட்டது.
தண்ணீரின்றி வறண்டு போன கேப்டவுன்
3 ஆண்டு கடுமையான தண்ணீர் பஞ்சத்தின் எதிரொலியாக தென் ஆப்ரிக்காவின் கேப்டவுன் அண்மையில் டே ஜீரோவை சந்திக்கப்போவதாக வெளியான செய்தி சர்வதேச அளவில் செய்திகளில் இடம்பெற்றது. மொராக்கோவின் இரண்டாவதுபெரிய நீர் தேக்கமான அல் மசீரா 3 ஆண்டுகளில் 60 சதவீதம் சுருங்கிப்போயுள்ளது. இதே போன்று ஸ்பெயினிலும் கடந்த 5 ஆண்டுகளில் நீர் பஞ்சம் அதிகரித்துவிட்டது, 60 சதவீத நீர்பரப்பு சுருங்கிவிட்டது. ஈராக்கின் மோசுல் அணையிலும் இதே நிலை தான்.
மக்கள் ஒத்துழைப்பு தேவை
உலக நாடுகள் நீர் மேலாண்மையையும், உள்கட்டமைப்பையும் மேம்படுத்த முயற்சிகள் எடுத்து வருகின்றன. எனினும் மக்களும் தங்களால் முயன்ற அளவு நீர் சேமிப்பை கொண்டு வந்தால் மட்டுமே தண்ணீர் பஞ்ச நிலைமையை சமாளிக்க முடியும் என்பதே நிதர்சனமான உண்மை.

Comments