உண்மையை மறைத்து தமிழகத்தை வஞ்சித்த ஸ்டெர்லைட் நிறுவனம்!!

தவறான தகவல்களைக் கொடுத்து மத்திய அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மையத்திடம் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்று இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத், கோவா, மகாராஷ்டிரா என மூன்று மாநிலங்களில் இருந்து விரட்டியடிக்கப்பட்ட வேதாந்தா நிறுவனம் தவறான தகவல்களை மத்திய அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மையத்திடம் சமர்ப்பித்து தமிழகத்திற்குள் நுழைந்திருக்கும் அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
இந்த தகவல்களை அந்த மையத்தைச் சேர்ந்த பெயர் வெளியிட விரும்பாத அதிகாரிகள் கூறுகையில், ''இந்த நிறுவனம் தங்களது மாநிலத்தில் அமைந்தால் சுற்றுப்புறச் சூழல் பாதிக்கப்படும் மற்றும் நச்சு வாயுவால் பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள் போன்ற காரணங்களை முன் வைத்து மகாராஷ்டிரா, கோவா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அனுமதி மறுத்து இருந்தன. இந்த நிலையில் உண்மைகளை மறைத்து தவறான தகவல்களைக் கொடுத்து தமிழகத்தில் இந்த நிறுவனத்தை நிறுவ வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றுள்ளது.
சுற்றுச்சூழல் அனுமதி பெறும்போது, தவறான சுற்றுச்சூழல் மாசு மதிப்பீட்டை வேதாந்தா நிறுவனம் சமர்ப்பித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் முக்கிய இடங்களில் இருந்து 25 கி.மீட்டர் தொலைவில் நிறுவனம் அமையும் என்று உறுதி அளித்து இருந்தனர். ஆனால், மன்னார் மரைன் நேஷனல் பார்க் அருகில் அமைத்தனர். பொது மக்களிடம் இருந்து எந்தவித விளக்கத்தையும் பெறாமல், தவறான சுற்றுச்சூழல் தகவலை கொடுத்துள்ளனர்'' என்றனர்.
மத்திய அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மையத்தின் இந்த குற்றச்சாட்டு குறித்து வேந்தாந்தா நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, ''உலக தரக் கட்டுப்பாட்டுக்கு உள்பட்டே வேதாந்தா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆரோக்கியம், சுற்றுப்புறச்சூழல், பாதுகாப்பு என அனைத்து வகையிலும் உலகத் தரத்திற்கு கட்டுப்பட்டே இயங்கி வருகிறோம். பல்வேறு அரசு துறைகளால் அமல்படுத்தப்படும் அனைத்து விதிகளையும் பின்பற்றி வருகிறோம்.
தற்போது தூத்துக்குடியில் நடந்து வரும் செயல்கள் வருத்தம் அளிப்பதாக உள்ளது. எங்களது ஆலையில் பணிபுரிபவர்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம். வசதிகள் ஏற்படுத்தி வருகிறோம். நிறுவனத்தை சுற்றி இருக்கும் சமுதாயத்தினருக்காகவும் இந்த நடவடிக்களை எடுத்து வருகிறோம். எங்களது பங்குதாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ஆலையை இயக்குவதற்கு விரைவில் சம்மதம் பெறுவோம்'' என்றார்.
சுற்றுச்சூழல் விதிகளை மீறிய வகையில் இந்த ஆலையை மூடுமாறு கடந்த 2010ல் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. இதேபோல், சுற்றுச்சூழலை மாசுபடுத்திய வகையில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ரூ. 100 கோடி அபராதம் விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
கடந்த 2013ல் இந்த ஆலையில் இருந்து வெளியேறிய நச்சு வாயு காரணமாக அங்கு வசித்து வரும் பல நூற்றுக்கணக்கானவர்களின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. இந்த ஆலையை மூடுவதற்கு மார்ச் 29ல் தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், சில தொழில்நுட்பங்களின் கீழ் இந்த ஆலையைத் திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியது.
''கடந்த 20 ஆண்டுகளாக சுற்றுச்சூழல் பாதிப்பை இந்த ஆலை ஏற்படுத்தி வந்துள்ளது. இதை நியாயப்படுத்தித்தான் தற்போது அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர் என்று மத்திய அறிவியல் மற்றும் சுற்றுப்புறச் சூழல் மையத்தின் இயக்குனர் ஜெனரல் சுனிதா நரைன் தெரிவிக்கிறார்.
தாமிரம் உற்பத்தி செய்யப்படும்போது கந்தக டை ஆக்சைடுடன், நச்சு வாயுக்களும் அதிகளவில் வெளியாகின்றன.
1 டன் தாமிரம் உற்பத்தி செய்யும்போது 2 கிலோ கந்தக டை ஆக்சைடு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments